வங்கதேசத்தில் விடிய விடிய துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற போலீஸ்
டாக்கா: வங்கதேசத்தில் குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்த 9 இஸ்லாமிய பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு ஒன்றுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நேற்று இரவு புகுந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சிறிய கையெறி குண்டை வீசினர். மேலும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் போலீசாரை நோக்கி சுடும்போது அல்லாஹு அக்பர் என்று மீண்டும் மீண்டும் கூறினர்.
பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர். அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 2 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இறுதியில் போலீசார் 9 பயங்கரவாதிகளை இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
அந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த 5 பேர் 20 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications