Gen-Z இளைஞர்களின் கட்சிக்கு பின்னடைவு? வங்கதேசத்தில் பிஎன்பி கூட்டணி முன்னிலை
டாக்கா: ஷேக் ஹசீனா தலைமையிலான 15 ஆண்டு கால ஆட்சியை, புரட்சி செய்து Gen-Z இளைஞர்கள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் இன்று வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் தற்போது வரை இளைஞர்களின் என்சிபி கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு சீட்கள் கிடைக்கவில்லை
புரட்சியை விட, அதை அரசியல் அதிகாரமாக மாற்றி காண்பிப்பது என்பதுதான் சவாலான விஷயம். இந்த சவாலை வங்கதேசத்தில் இளைஞர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

மொத்தம் 12.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடத் தகுதி பெற்று இருந்தனர். ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக Gen-Z இளைஞர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், பிற்பகல் வரையிலும் கூட வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. கடைசியாக 2 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரத்தை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதுவரையிலும் கூட 50% கூட வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
புரட்சி போராட்டத்தைத் தொடர்ந்து மாணவர்கள் தொடங்கிய நேஷனல் சிட்டிசன் பார்டி (என்சிபி) கட்சியானது போதிய நிதி மற்றும் அடிமட்டக் கட்டமைப்பு இல்லாததால் அரசியல் களத்தில் திணறி வருகிறது. இதனை சமாளிக்க, ஜமாத் இ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணியை வைத்திருக்கிறது. இக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியாகும். ஆனால், என்சிபி முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சி. எனவே, என்சிபியில் உள்ள இளைஞர்கள் பலர் இந்த கூட்டணியால் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதேபோல ஷேக் ஹசீனாவை அகற்ற நடந்த போராட்டங்களில் பெண்கள் பலர் பங்கேற்றிருந்தனர். ஆனால், என்சிபி-ஜமாத் இ-இஸ்லாமி கூட்டணியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெண்களின் பெயர் குறைவான அளவில்தான் இருக்கிறது. இது பழமைவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது. எந்த நோக்கத்திற்காகப் புரட்சி போராட்டங்கள் நடைபெற்றதோ, அந்த நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த அம்சங்கள் இருக்கின்றன என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான் இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 299 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில், அது முடிந்தவுடனேயே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக இப்போது வரை 14 தொகுதகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் 13 தொகுதிகளில் அந்நாட்டின் பழம்பெறும் கட்சியான பிஎன்பி வென்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இளைஞர்களின் என்சிபி கூட்டணி வென்றுள்ளது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் பிஎன்பி கட்சியே பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும்.












Click it and Unblock the Notifications