7 சிஸ்டர்களுக்கு குறி.. பதவி விலகும் முன் இந்தியாவை சீண்டிய வங்கதேச முகமது யூனுஸ்.. திமிர் பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பொறுப்பேற்றார். முன்னதாக நேற்றைய தினம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முன்னதாக நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் நம் நாட்டின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை சேர்த்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் பதவி விலகி நம் நாட்டுக்கு வந்தார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் இருந்தார்.

இந்த வேளையில் அவர் பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டினார். நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டார். எல்லையில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிமை கொண்டாடும் வகையில் பேசினார். இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியா - வங்கதேச உறவு சீர்க்குலைந்தது.
வங்கதேச தேர்தல் ரிசல்ட்
இதற்கிடையே தான் கடந்த 12 ம் தேதி வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தும் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 299 தொகுதிகளில் 208 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்றார்.
விடைபெற்ற முகமது யூனுஸ்
முன்னதாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு முடிவுக்கு வந்தது. முகமது யூனுஸ் தனது தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விடைபெற்றார். இதையடுத்து அவருக்கு பிரியா விடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முகமது யூனுஸ் நம் நாட்டை சீண்டும் வகையில் திமிராக மீண்டும் பேசியுள்ளார்.
மறைமுகமாக தாக்குதல்
இதுதொடர்பாக முகமது யூனுஸ், ''வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக பதவி வகித்த இந்த 18 மாத காலத்தில், வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் இறையாண்மை, தேசிய நலன், கண்ணியம் ஆகியவற்றை மீட்டுள்ளேன்.நம் நாடு வேறு எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியவில்லை. அவர்களின் உத்தரவுப்படி நாம் நமது அரசை நடத்தவில்லை'' என்றார். இதன்மூலம் நம் நாட்டை சீண்டினார். அதாவது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்த நிலையில் அதனை மறைமுகமாக குறிப்பிட்டார்.
7 சிஸ்டர் மாநிலம்
மேலும் முகமது யூனுஸ், ''நமது கடல் பகுதி ஒரு புவியியல் எல்லை மட்டுமல்ல, உலக நாடுகளுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு நுழைவு வாயில். நேபாளம், பூட்டான், ஏழு சகோதரிகளுடன் இந்த பிராந்தியம் மிகப் பெரிய பொருளாதார ஆற்றலை கொண்டுள்ளது'' என்றார். இதில், இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியுள்ளார்.
நம் நாட்டுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் 7 சிஸ்டர்கள் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாநிலங்களை நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது நம் நாட்டின் ஒரு பகுதியாக இந்த மாநிலங்கள் இல்லை என்று பொருள்படும்படி அவர் பேசியுள்ளார். முகமது யூனுஸின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications