மம்தா பானர்ஜி அறிவிப்பால் கொதித்த வங்கதேச அரசு.. இந்திய தூதரகத்திடம் முறையீடு? என்ன நடந்தது?
கொல்கத்தா: வங்கதேசத்தில் வன்முறை காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு வங்க தேச அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசம் முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. வங்க மொழி பேசிய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன ஒடுக்குமுறையை ஏவியது. இதில் பல்லாயிரக்கணக்கான வங்கதேச மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அங்கு வங்கதேச விடுதலைப் போர் வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் 1971-ல் வங்கதேசம் தனி சுதந்திர நாடாக உருவெடுத்தது.

வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு அந்நாட்டில் வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு சில ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்ற தலையீட்டினால் மீண்டும் இந்த 30% இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். வன்முறையாளர்களை கண்டதும் சுட வங்க தேச அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இந்தியர்கள் உள்ளிட்டோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வங்கதேச வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு அடைக்கலம் தர தயாராக உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், நான் வங்கதேச நாட்டின் பிரச்சனை குறித்து பேசவில்லை.
அதைப் பேசுவதற்கு மத்திய அரசு இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளை தட்டும் போது நாங்கள் அடைக்கலம் கொடுப்போம். உதவி கேட்டு வரும் அகதிகளுக்கு உரிய மரியாதை தருவதை ஐநா உறுதி செய்திருக்கிறது" என்றார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு வங்க தேச அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கதேச உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் மம்தாவின் பேச்சு அமைந்து இருப்பதாகவும் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் பலன் அடைய பார்ப்பார்கள் எனவும் தனது அதிருப்தியை இந்திய துணை தூதகரத்திடம் வங்க தேச அரசு எழுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications