ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. தீர்ப்புக்கு எதிராக போராட்டம்! வங்கதேசத்தில் வெடிக்கும் கலவரம்
டாக்கா: கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு காரணம் ஷேக் ஹசீனா என்று அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ஷேக் ஹசீனா குற்றவாளி என்றும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக வங்கேதேச தலைநகரில் போராட்டம் வெடித்திருக்கிறது.
போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்றதை போலவே இந்த ஆண்டும் மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் எச்சரித்துள்ளனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நேரத்தில், நீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பலர் கோஷமிட்டனர். நீதிமன்றத்தில் ஹசீனாவுக்கு ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு மற்றும் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணாமல், காவல்துறை மற்றும் ராணுவத்தை ஷேக் ஹசீனா பயன்படுத்தினார்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 1,400 பேர் வரை கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் இந்த படுகொலைகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. நிலைமை கையை விட்டு போன நிலையில், ஹெலிகாப்டர் மூலம் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இன்று தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், இது தனக்கு எதிரான தீர்ப்பு என்றும், ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசின் சூழ்ச்சியால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு என்றும் ஹசீனா விமர்சித்திருக்கிறார். இந்த தீர்ப்பை ஒருதலைபட்சமானது என்றும் அவர் சாடியிருக்கிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை சர்வதேச அரசுகள் உற்றுநோக்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications