காஷ்மீர் பிரச்சினை: ரகசியமாக உதவ முன்வந்த ஒபாமா.. மறுத்த பாகிஸ்தான்
வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியமாக உதவ முன் வந்ததாகவும், ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்பதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த விஷயத்தில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக உதவ முற்பட்டதாக புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான ஹுசேன் ஹக்கானி எழுதியுள்ள "Manificent Delusions'' என்ற புத்தகத்தில் தான் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஆஸிப் அலி சர்தாரியை நேரில் சந்தித்து, ஒபாமா கொடுத்தனுப்பிய கடிதம் ஒன்றை அளித்தார்.
அதில், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், அதே சமயம் அல் காய்தா, தெஹ்ரிக் இ தாலிபான், லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒபாமா கூறியிருந்தார்.
அமைதி மற்றும் பாதுகாப்புக்கான வழியை தேர்வு செய்வதற்குப் பதிலாக சில நாடுகள் மறைமுக யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. இதுபோன்ற நிழல்யுத்தங்களை சகித்துக்கொள்வதோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதோ கூடாது என ஒபாமா அந்த கடிதத்தில் மேலும் கூறியிருந்தார். ஆனால் ஒபாமாவின் இந்த பேரத்தை ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.