பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை
பெர்லின்: தற்போது புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஆறு வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது கொரோனா பரவலின் வேகம் பிரிட்டன் நாட்டில்தான் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் தற்போது பரவுவது புதிய வகை கொரோனா என்றும் இந்த புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70 சதவிகிதம் வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்று கேள்வியும் நிலவுகிறது.

இதற்குப் பதிலளித்துள்ள பயோஎன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் உகுர் சாஹின், "அறிவியல்பூர்வமாக பார்க்கும்போது தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் நமது தடுப்பு மருந்து வேலை செய்யும்.
இருப்பினும், தேவைப்படும்பட்சத்தில் வெறும் ஆறே வாரங்களில் புதிய வகை கொரோனவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியும். பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒன்பது வித மாற்றங்களைக் கொண்டுள்ளது. வழக்கமாக இதுபோல புதிதாகக் கண்டறியப்படும் கொரோனா வகைகளில் ஒரு மாற்றம் மட்டும் இருக்கும்.
ஃபைசருடன் இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பலனுள்ளதாகவே இருக்கும். ஏனென்றால், அதில் 1,000க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றில் ஒன்பது மட்டுமே புதிய வகையில் மாறியுள்ளன. அதாவது, 99 சதவீத புரதம் இன்னும் அதே மாதிரியாக இருக்கிறது. இதனால் எங்கள் தடுப்பு மருந்து வழக்கம்போல பலனளிக்கும்" என்றார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்குப் பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications