கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு.. அலறிய வீரர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்.. பரபர வீடியோ
காபூல்: ஆப்கன் நாட்டில் டி-20 கிரிக்கெட் போட்டியின் போது, குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கன் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தன.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. இருந்த போதிலும், ஆப்கன் நாட்டில் இன்னும் அமைதியான சூழல் எதுவும் ஏற்படவில்லை.

ஆப்கன்
இதனிடையே ஆப்கன் நாட்டில் அவ்வப்போது வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே ஆப்கன் தலைநகர் காபூலின் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்றைய தினம் உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருந்தது. உள்நாட்டு டி20 லீக்கில் பாமிர் சல்மி மற்றும் பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் அணிகள் மோதின.

குண்டுவெடிப்பு
அப்போது திடீரென அரங்கில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று இருந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் அங்கு இருந்த பார்வையாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். முதலில் அது தற்கொலைப் படை தாக்குதல் என்று தகவல் வெளியான நிலையில், பின்னர் தான் அது கிரானைட் தாக்குதல் என்பது உறுதியானது,

உயிரிழப்பு இல்லை
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. இருப்பினும், 4 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர், போட்டி மீண்டும் வழக்கம் போலத் தொடங்கியது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆப்கன் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐநா அதிகாரி
இந்த குண்டுவெடிப்பு நடந்த போது, ஐநா சபையின் உயர்மட்ட அதிகாரி ரமிஸ் அலக்பரோவ் கூட அந்த மைதானத்தில் இருந்தார். நல்வாய்ப்பாக அவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐநா அதிகாரி, ஆப்கானிஸ்தானில் மக்கள் அதிகரிக்கும் வன்முறை காரணமாகப் பொதுமக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.

முதல்முறை இல்லை
ஆப்கன் நாட்டில் வார விடுமுறை வெள்ளிக்கிழமை என்பதால், போட்டியைக் காண ஏராளமானோர் குவிந்தனர். இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த குண்டுவெடிப்பில் யாரும் உயிரிழக்கவில்லை. அதேநேரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துவது இது முதல்முறை இல்லை. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நான்கு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியது. இந்தக் கொடூர தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications