காரில் வெடிகுண்டுகளை நிரப்பி தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈராக்கில் 35 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சதுக்கத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈராக்கில் ஊடுருவியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்தே பெரும்பாலும் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை பாக்தாத்தின் சதர் நகரில் உள்ள சதுக்கத்தில் ஏராளமான ஷியா பிரிவு கூலித்தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தீவிரவாதிகள் கூட்டத்தில் வேகமாக மோதி வெடிக்கச்செய்தனர்.
இதில் 35க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த சனிக்கிழமை இங்குள்ள மார்க்கெட் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
ஷியா ஹோலி சிட்டியில் நடந்த மற்றொர தாக்குதலில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் ஷியா பிரிவினரையே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.