துபாயில் கோலாகலமாக நடந்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீடு
துபாய்: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பற்றிய "ப.சிதம்பரம் ஒரு பார்வை" நூல் வெளியீட்டு விழா, செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, துபாய் அல்கிஸஸ் பெண்கள் உயர் தொழில் நுட்ப கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கார்த்தி.ப.சிதம்பரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமீரகத்திற்கான இந்திய தூதர், லோகேஷ் கலந்து கொண்டார்.
விழாவின் துவக்கமாக அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் வரவேற்புரை நல்கினார்.

இந்திய தூதர் வெளியிட்டார்
இவ்விழாவில் கவிஞர். இலக்கிய நடராஜன் தொகுத்த, "ப.சிதம்பரம் ஒரு பார்வை" நூலின் முதல் பிரதியை இந்திய தூதர் லோகேஷ் வெளியிட, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், அப்துல் ரஹ்மான், பெற்றுக் கொண்டார்.

வேலூர் எம்.பி. பங்கேற்பு
தொடர்ந்து துபாய்க்கான மலேசிய துணைத்தூதர் (பொறுப்பு) அபுபக்கர் சுக்ரி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர், அப்துல் ரஹ்மான்,ஏர் இந்திய அமீரக மேலாளர் ராம் பாபு, சட்ட கதிர் ஆசிரியரும், சென்னை வளர்ச்சி கழகத்தின் தலைவருமான டாக்டர்.வி.ஆர்.எஸ்.சம்பத், நிதி அமைச்சரின் முன்னாள் தனிச்செயலரும், டில்லி முத்தமிழ் பேரவைத்தலைவருமான கே.வி.கே பெருமாள், ஒன்இந்தியா- தமிழ் இணையதள ஆசிரியர் ஏ.கே.கான், மற்றும் மும்பை மத்திய தமிழ்ச்சங்க தலைவர் அண்ணமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கார்த்தி சிதம்பரம் சிறப்புரை
பின்பு, சிறப்புரை வழங்கிய கார்த்தி.ப.சிதம்பரம், தன்னுரையில், ப.சிதம்பரம் அவர்கள் சிலர் நினைப்பதை போல் ஒரே நாளில் இந்த நிலைக்கு வந்து விடவில்லை, எழுபதுகளில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, தொடர்ந்து 7 முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்று இந்த உயர் நிலையை அடைந்துள்ளார் என்றார்.

துபாய் வளர்ச்சி - கார்த்தி சிதம்பரம் பிரமிப்பு
மேலும், மிகக்குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சியடைந்த துபாயை கண்டு பிரமிப்பதாக கூறிய அவர், அந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது இந்தியர்களே என்று பெருமிதம் கொண்டார். மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடே வல்லரசாக இயலும் என்றவர், அந்த வகையில் நம் நாட்டில் பூர்த்தியாக வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்றவர் ஆரோக்கிய மற்ற விமர்சனங்களில் நம் திறனை வீணாக்காமல், வளர்ச்சி பாதையில் நம் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமென்றார்.

அரங்கு நிறைந்த தமிழர் கூட்டம்
அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் திரண்டு வந்திருந்ததால் அரங்கம் நிறைந்து வழிந்தது. கார்த்தி சிதம்பரத்தின் உணர்வுமிக்க, உற்சாகமான பேச்சால் அரங்கம் பலத்த கரவொலியால் அதிர்ந்து கொண்டே இருந்தது. நிகழ்ச்சிகளை குணா தொகுத்து வழங்க, ஹமீது ரஹ்மான் நன்றியுரை வழங்கினார்.

இன்னிசை நிகழ்ச்சி
விழாவின் இறுதியாக, பிரபல பிண்ணனி பாடகி மஹதி, பாடகர் ஹரீஸ் ராகவேந்தர் மற்றும் உள்ளூர் பாடகி ஷப்னம் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் யூ.கே முரளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கவிதா பிரசன்னா குழுவினரின் குழந்தைகள் நடன நிகழ்ச்சியும், அசத்தல் மன்னன் அஸ்வினின் பலகுரல் நிக்ழச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அரிகேசவ நல்லூர் எஸ்.எஸ்.மீரான், அமுதரசன், ஹமீது ரஹ்மான், கீழைராஸா ராஜாக்கான் , சிம்மபாரதி, லக்ஷ்மி நாராயணன், நயீம் மற்றும் முகைதீன் பிச்சை ஆகியோர் சிறப்பாக செய்ய, விழா மேலாண்மையை எமிட்டா ஈவிண்ட்ஸ் கவனித்து கொண்டது.












Click it and Unblock the Notifications