தைவான் விமான விபத்து: பழுதான என்ஜினுக்கு பதில் இயங்கி கொண்டிருந்த என்ஜினை நிறுத்திய விமானிகள்?
ஹாங்காங்: தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் 53 பயணிகளுடன் கின்மென் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 2 விமானிகள், 3 சிப்பந்திகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே மிக வேகமாக தரையை நோக்கி பாய்ந்தது. பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் உரசி உடைந்தது.
விமானத்தில் பயணம் செய்த 36 பேர் பலியாகிவிட்டனர். 15 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். மேலும் 7 பேரைக் காணவில்லை.
விமானத்தின் பிளாக் பாக்ஸ்களை சோதனையிட்டதில், விமானம் பறக்க ஆரம்பித்த 37 வினாடிகளில் வலதுபுற என்ஜின் செயலிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. மற்றொரு என்ஜினை வைத்தே மேலும் கொஞ்சம் பறந்துவிட்டு உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறக்கியிருக்க முடியும்.
ஆனால், அடுத்த 48வது வினாடியில் செயல்பட்டுக் கொண்டிருந்த இடதுபுற என்ஜினும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது பைலட்களின் தவறாகவே கருதப்படுகிறது.
வழக்கமாக பிரச்சனைக்குள்ளாகும் என்ஜினை முழுவதுமாக செயல்படாமல் நிறுத்தி வைக்க அதை பைலட்கள் சுவிட்ச் ஆப் செய்வது வழக்கம். ஆனால், இந்த விமானத்தின் விமானிகள், செயல்படாத என்ஜினை சுவிட்ச் ஆப் செய்வதற்கு பதிலாக, செயல்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு என்ஜினை தவறுதலாக சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் தான் விமானம் தரையை நோக்கி பாய்ந்துள்ளது. உடனடியாக அந்த என்ஜினை மீண்டும் இயக்க வைக்க முயற்சித்துள்ளனர் விமானிகள். ஆனால், அதற்குள் தரையில் விழுந்து நொறுங்கி ஆற்றுக்குள் பாய்ந்துவிட்டது விமானம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஆற்றுக்குள் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்தில் 2 பைலட்களும் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications