கணக்கு ஃபார்முலா படிக்கும் போது கவிதை தோணுமா?
பள்ளியில் படிக்கும் காலத்தில் பிதாகரஸ் தியரமும், திரிகோணமிதியும் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதை கற்றுக் கொடுத்த கணித ஆசிரியரின் அழகுதான். கணிதம் மீதான காதலை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.
கணித சூத்திரங்கள் என்ன பெரிய கம்ப சூத்திரங்களா? ‘எல்லாம் இப்படி போய் அப்படி வந்திரலாம்' என்று சொல்லி சொல்லியே பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு எடுக்க வைக்கும் சாமர்த்தியம் சில கணித ஆசிரியரால் மட்டுமே முடியும்.
கணிதம் படித்தோமா இல்லையோ, கணித வகுப்பில் கவிதை எழுத கற்றுக் கொண்டோம். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. கணிதத்தை காதலோடு படித்தால் கலை ரசனையும், அழகுணர்ச்சியும் அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அட அதுதான் நம்மால் கணித வகுப்பில் கவிதை எழுத முடிந்ததா? என்று இப்போது கேட்டால் அதற்கான விடை தெரியவில்லை.

கணிதத்தின் காதலர்கள்
மனதிற்குப் பிடித்த இசையை கேட்கும் போதும், அழகான புத்தகங்களை வாசிக்கும் போதும் நமது மூளையில் அழகுணர்ச்சி ஏற்படுகிறது. அதே போல கடினமான கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும், எழுத்துக்களையும் காணும் கணித நேசிப்பாளர்களுக்கும், கணித வல்லுனர்களுக்கும் ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

கண்ணால் கண்டபோதோ…
ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கும் போது இவள்தான் உனக்குறியவள் என்று ஒரு ஆணின் மூளையில் மணியடிக்குமாம். அதற்குக் காரணம் அந்த அழகுணர்ச்சியினால் ஏற்படும் தாக்கம்தான். அதேபோல கணித சூத்திரங்களை காணும் வல்லுநர்களுக்கு அதன் அழகியலால் மூளையில் கலைரசனை உருவாகிறது என்கின்றனர் லண்டனின் யுனிவர்சிட்டி கல்லூரியில் கணித வல்லுநர்களை மூளை ஸ்கேன் செய்தவர்கள்.

மூளையில பல்பு எரியுதோ?
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் விதவிதமான கணித சூத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிட்ட சில சூத்திரங்களை அவர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டனவாம்.

நரம்புதான் காரணமாம்
இந்த அபரிமிதமான அழகுணர்ச்சி ஏற்பட நியூரோ பயாலஜிக்கல் நரம்பியல் அடிப்படை ஒன்று இருக்க வேண்டும் என இந்த ஆராய்ச்சி தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளன.

புரிதலுடன் பாருங்கள்
கணித சூத்திரங்களை ஒருவர் புரிதலுடன் பார்க்கும்போது அவருடைய மூளையின் பல்வேறு பாகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

தூண்டப்படும் உணர்வுகள்
சில நல்ல சூத்திரங்களை பர்க்கும்போது அவர்களுடைய மூளையின் உணர்வுரீதியான பாகமான மீடியல் ஒர்பைடோ ஃபிரண்டல் கார்டெக்ஸ்( medial orbitofrontal cortex) தூண்டப்படுகிறதாம்.

காதலுடன் கணிதம்
ஒரு நல்ல இசையைக் கேட்கும்போது ஒரு அற்புதமான ஓவியத்தை பார்க்கும்போது எவ்வித மாற்றம் அடையுமோ அதேபோல கணித சூத்திரத்தினை காதலுடன் பார்க்கும் போதும் அது மாற்றம் அடைகிறதாம்.

ஐன்ஸ்டீன் தத்துவமும்
கணிதம் மட்டுமல்ல இயற்பியலில் வரும் கணிதங்களும், ஃபார்முலாக்கள், ஐன்ஸ்டீன் தத்துவம் போன்றவற்றை படிக்கும் போதும் அழகுணர்ச்சி தோன்றுமாம்.

இனி கணக்கு கசக்குமா?
கணிதம் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாய் கசக்கத்தான் செய்யும், அதையும் காதலுடன் அணுகினால் கவிதையாய் மனதில் பதியும் என்று ஆசிரியர்கள் சொல்வதை புரிந்து கொண்டால், இனி கணிதம் படிக்கும் போதே கவிதையும் எழுதலாம்தானே!












Click it and Unblock the Notifications