ரஷ்யாவில் மேஜிக்.. 5 ஆண்டுக்கு பின் மோடி - ஜின்பிங் முக்கிய முடிவு! தொடங்கும் புது அத்தியாயம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசியதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்தியா - சீனா இடையே நிலவி வரும் மோதலை தவிர்த்து, இருநாடுகள் இடையேயான தொடர்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாலும் புது அத்தியாயம் எழுதப்படுகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, ரஷ்யா, சீனா, தென்ஆப்பிரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மட்டும் உலக மக்கள்தொகையில் 41 சதவீதம் பேர் உள்ளனர். அதேபோல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் தான் 24 சதவீதம் வரை இந்த 5 நாடுகள் பங்களிப்பு செய்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ரஷ்யா தலைமையேற்றுள்ளது. ரஷ்யாவின் கஸான் நகரில் நேற்றும், இன்றும் பிரிக்ஸ் உச்சி மாநாடு என்பது நடந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக இன்று பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து இருநாடுகளின் உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டு மகாபலிபுரம் வந்திருந்த ஜி ஜின்பிங், மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து பேசியிருந்தார். அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஏற்கனவே லடாக் பகுதியில் இருநாடுகளும் இணைந்து ரோந்து பணியை மேற்கொள்ள டீல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண்பதில் சீனாவும், இந்தியாவும் உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு நடுவே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருநாடுகள் இடையேயும் தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மோதல்கள் மற்றும் வேறுபாடுகளை தீர்த்து ஒருவருக்கொருவர் வளர்ச்சி காண உதவ வேண்டும் என்று ஜி ஜின்பிங், பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக சீனாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது.
இதற்கு பிரதமர் மோடி, ‛‛எல்லையில் அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பை பேணுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை உள்ளிட்டவை தேவை. இது தான் இருதரப்பு இடையேயான உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு என்பது சமீபகாலமாக மோசமடைந்துள்ளது. இதற்கு எல்லையில் நம் நாட்டிடம் சீனா வாலாட்டி வருவது தான் காரணம்.
குறிப்பாக நம் நாட்டு பகுதிகளை சீனா ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இதற்கு இந்தியா உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகிறார். குறிப்பாக 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நம்நாட்டு ராணுவ வீரர்களும், சீன வீரர்களும் மோதிக்கொண்டன. இதில் நம் நாட்டை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீனா தரப்பில் 40 வீரர்கள் வரை உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் இருநாடுகளின் உறவின் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் மோடி - ஜி ஜின்பிங் இடையே இருநாடுகளின் உறவுகள் பற்றி 2019ல் மாமல்லபுரத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாடு, கடந்த அண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கொண்டாலும் கூட 5 ஆண்டுகளாக இருதரப்பு உறவுகள் பற்றி எதுவும் பேசாத நிலையில் ரஷ்யாவில் இரு தலைவர்களும் சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேசியுள்ளது இந்தியா -சீனா இடையேயான உறவில் புதிய அத்யாயத்தை எழுதுகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications