அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பவுன்ஸ் ஆகி கொள்ளைக்கார சிறுவன் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் துப்பாக்கி குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். கொள்ளை கும்பல் தெருவில் சென்ற ஒருவரை சுட்டதில் குண்டு அவரது முகத்தை துளைத்து கொள்ளைக்காரன் ஒருவனின் மீது பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் அலிமனி போல்வார்டில் ஒருவர் கடந்த மாதம் 14ம் தேதி அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கூட்டம் ஒன்று அவரை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளது. அவர் பயந்து போய் நின்றபோது சிறுவன் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அவரது முகத்தில் சுட்டான்.
இதில் குண்டு அவரது முகத்தை துளைத்துக் கொண்டு அவர் அருகில் நின்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த க்லிப்டன் சாட்மேன் என்ற 16 வயது சிறுவன் மீது பாய்ந்தது. இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதை பார்த்து மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு வந்து குண்டடிபட்டு கிடந்த நபர் மற்றும் இறந்து கிடந்த சிறுவனை பார்த்தனர். குண்டடிபட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த நபரை சுட்ட சிறுவனை போலீசார் அடையாளம் கண்டபோதிலும் அவன் மைனர் என்பதால் அவனின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட மறுத்துவிட்டனர். அவன் மீது கொள்ளை முயற்சி மற்றும் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.