கனடா பஞ்சாயத்து.. “பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை” என அடிபணிந்தது ஜஸ்டின் ட்ரூடோ அரசு!
ஒட்டாவா: கனடாவில் இந்தியாவின் உளவுத்துறை ஏஜென்ட்டுகள் தொடர்ந்து குற்ற செயல்களை செய்து வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியிருந்தது. மட்டுமல்லாது இந்தியாவின் தூதரக அதிகாரிகள் சிலரையும் வெளியேற்றிருந்தது. இப்படி இருக்கையில் இந்த பஞ்சாயத்துக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் பிரிவினை பேசும் நபர்களுக்கு கனடா தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது என மத்திய அரசு குற்றம்சாட்டி வந்தது. அதிலும் குறிப்பாக நிஜ்ஜார் எனும் சீக்கிய மதத்தை சேர்ந்த தலைவர், காலிஸ்தான் பிரிவினை பேசி இந்தியாவில் சதி செயல்களை செய்ய ஊக்குவிப்பதாகவும் விமர்சித்து வந்தது. நிஜ்ஜாரை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கனடாவை இந்தியா வலியுறத்தியது. ஆனால் அந்நாட்டு அரசு இதையெல்லாம் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் நிஜ்ஜாரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவின் உளவுத்துறை ஏஜென்ட்டுகளே இதை செய்திருக்கின்றனர் என்றும் கனடா அரசு குற்றம்சாட்டியது. தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதில் அளிக்கவில்லை. ஆனால் கனடாவோ, இதை விடுவதாக தெரியவில்லை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கனடா அதிகாரிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து இரு நாடும் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. மறுபுறம் கனடா அதிகாரிகளோ, இந்தியா மீதான குற்றச்சாட்டை அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டியாக அளித்து, விஷயத்தை வேண்டும் என்றே ஊதி பெரியதாக்கினர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பதிலுக்கு கனடாவிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் வெளியேற்றப்பட்டனர். இந்தியாவும் இதையே செய்தது. இப்படியாக இரு நாடுகளுக்கு இடையேயும் பஞ்சாயத்துகள் தீவிரமடைந்தன. கனடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குறி வைப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று கனடா தற்போது சரணடைந்துள்ளது. இன்று அந்நாடு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கனடாவில் நடக்கும் பிரச்னைகளக்கு இந்திய ஏஜென்ட்டுகளை குற்றம்சாட்டியிருந்தோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நாங்கள் இதில் குற்றம்சாட்டவில்லை. இங்கு நடக்கும் குற்றங்களுடன் இவர்களை தொடர்புப்படுத்தும் எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை" என்று கூறியுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்தியாவை பகைத்துக்கொள்வது அவ்வளவு சரியான நடைமுறையாக இருக்காது. எனவேதான் கனடா சரண்டர் ஆகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications