இந்தியாவுடன் கடும் மோதல் போக்குக்கு நடுவே.. மறக்காமல் ஜஸ்டின் ட்ரூடோ செய்த விஷயம்.. ஆஹா!
ஒட்டாவா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா - கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம்தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இருந்த நிஜ்ஜாரை அவரை கொலை செய்தது யார்? என்பது இன்னும் தெரியவில்லை. இதில் உண்மையை கண்டறிய முடியாமல் கனடா திணறி வருகிறது.

எனினும், இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது என சாடியது. ஆனாலும் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பான நம்பகமான தகவல்கள் கிடைத்ததாகவும் கடந்த மாதம் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அது மட்டும் இன்றி இந்திய தூதரையும் வெளியேற உத்தரவிட்டு இருந்தார். கனடாவின் இந்த செயல் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து, கனடாவிற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா அதிகாரி வெளியேற மத்தியஅரசு உத்தரவிட்டது. இதனால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறவில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது கனடாவிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நவராத்ரி பண்டிகைக்கு ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய சமூகத்தினருக்கும் நவராத்ரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் எனது நவராத்ரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத நம்பிக்கையில் புனிதமான ஒரு பண்டிகையாக நவராத்ரி கருதப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். கனடாவில் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவு வசித்து வருவதால் இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications