டோரன்டோ "கே" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்
டோரன்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் நடத்தவுள்ள பேரணியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டு பிரதமராக பதவி வகித்து வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை நேரில் சந்தித்து அவரின் ஆசையை நிறைவேற்றினார்.
இந்நிலையில் எல்.ஜி.பி.டி எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தாரின் பேரணியில் கலந்து கொள்ள ஜஸ்டின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
36வது ஆண்டாக இந்தப் பேரணி இந்தாண்டு ஜூலை 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தாண்டுப் பேரணியில் பிரதமர் பங்கேற்பதால், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்கும் முதல் கனடா பிரதமர் இவர்தான்.
பிரைடன் டோரன்டோ அமைப்பு இந்த பேரணியை நடத்தவுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இது பிரைட் மாதத்தையும் கொண்டாடவுள்ளது. மேலும் டோரன்டோ சிட்டி ஹாலில் எல்ஜிபிடி கொடியையும் அது ஏற்றவுள்ளது.
பிரைட் மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில், ஓன்டாரியா மாகாண முதல்வர் காத்லீன் வைன் அவரது காதலியான ஜேன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். டோரன்டோ மேயர் ஜான் டோரியும் பங்கேற்கிறார்.