தியேட்டர்கள் மீது தாக்குதல்! கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்!
ஒட்டாவா: கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், அங்கு இந்திய திரைப்படங்கள் திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்கு மீது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒருமுறை தீ வைப்பு முயற்சியும், இரண்டாவதாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "செப்டம்பர் 25 அன்று தீவைப்பு முயற்சியும், அக்டோபர் 2 அன்று துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: ஏ லெஜெண்ட் சாப்டர் 1 மற்றும் பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டபோதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தியேட்டர் நிர்வாகம் திரையிடலை நிறுத்தியிருக்கிறது.

முதல் சம்பவம் செப்டம்பர் 25 அன்று நடந்தது. திரையரங்கம் வெளியிட்ட கண்காணிப்புப் பதிவுகளில், அதிகாலை 2 மணியளவில் ஒரு சாம்பல் நிற எஸ்யூவி வந்து தியேட்டருக்கு வெளியே நோட்டம் விட்டு சென்றது. இதனையடுத்து, இரண்டு சந்தேக நபர்கள் தனித்தனி வாகனங்களில் வந்து, பெட்ரோல் போன்ற எதையோ ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
அதேபோல, அக்டோபர் 2 அன்று இரண்டாவது தாக்குதல் நடந்தது. அதிகாலை 1:50 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திரையரங்கின் நுழைவாயிலை நோக்கி பல சுற்றுகள் சுட்டார். காவல்துறையினர் அந்த நபரை கருமையான தோல் கொண்ட, கனமான உடல்வாகு கொண்ட ஆண் என்றும், கருப்பு உடை அணிந்து முகமூடி அணிந்திருந்ததாகவும் அடையாளம் கண்டுள்ளனர். இரு சம்பவங்களும் திரையரங்கின் நுழைவாயிலைக் குறிவைத்து நடத்தப்பட்டன. இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றவாளிகளின் நோக்கம் குறித்து காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் இந்த சம்பவத்தின் பின்னால் காலிஸ்தான் அமைப்பினர் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே கனடாவில் காலிஸ்தான் அமைப்பினருக்கும், இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய திரைப்படங்களை குறி வைத்து பதற்றத்தை உருவாக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications