ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததால் முதலாளிக்கு சிறை.. மியான்மரில் ராணுவம் அட்டகாசம்!
நைப்பியிதோ: மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் கடந்த 1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால், அந்நாட்டில் அடிக்கடி ஆட்சி கவிழ்ப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. 1962ம் ஆண்டு ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு, 1988ம் ஆண்டு மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு, மூன்றாவது முறையாக 2011ம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு இறுதியாக 2021ம் ஆண்டு நான்காவது முறையாக ஆட்சி கவிழ்ப்பு நடந்திருக்கிறது. 2021 தொடங்கி தற்போது வரை மியான்மரில் ராணுவம்தான் ஆட்சி செய்து வருகிறது.

நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், செல்பொன் கடை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் மியான்மர் ராணுவம் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்தது மட்டுமல்லாது அவருடைய 3 செல்போன் கடைகளையும் ராணுவம் இழுத்து மூடியுள்ளது.
இந்நாட்டின் சட்ட திட்டத்தின்படி ஊதிய உயர்வு கொடுப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், ஊதிய உயர்வு கொடுப்பதன் மூலம் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என மக்கள் நினைத்துக்கொள்வார்கள் என்று ராணுவம் கருதுகிறது. இது ஆட்சியை நடத்தும் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு எதிராக கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மியான்மரில் பெரும்பாலான மக்கள் குறைந்தபட்ச ஊதியம் வாங்கவே சிரமப்படுகிறார்கள்.
இப்படி இருக்கையில் ஒரு சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுப்பது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று ராணுவம் நம்புகிறது. எனவே கைது செய்யப்பட்ட நபரின் கடையை மூடி, "சமூகத்தின் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைத்ததற்காக இக்கடை மூடப்படுகிறது" என்கிற வாசகம் கொண்ட போர்டையும் கடைக்கு முன் வைத்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் முதலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த கடையின் ஊழியர்கள் கூறுகையில், "சம்பள உயர்வுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம், ஆனால் இப்போது கடை மூடப்பட்டுவிட்டது. எங்களுக்கு வந்துக்கொண்டிருந்த குறைந்தபட்ச சம்பளம் கூட இப்போது கிடைக்கவில்லை. நாங்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல ஊதிய உயர்வு கொடுத்ததாக சமீப நாட்களாக பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மியான்மரின் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications