ஜி ஜின்பிங் எடுக்கும் முடிவு என்ன? உற்று பார்க்கும் உலக நாடுகள்.. இன்று ஆரம்பிக்கும் முக்கிய கூட்டம்
பெயஜிங்: சீனாவில் உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட அமைப்பாகத் தேசிய மக்கள் காங்கிரஸ் இருக்கிறது. இந்த அமைப்பின் வருடாந்திர கூட்டம் இன்று தொடங்குகிறது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த கூட்டம் நடைபெறும் சூழலில், இதில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்பதால் உலக நாடுகள் இதை உற்றுக் கவனித்து வருகின்றன.
நமது அண்டை நாடான சீனாவில் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வான தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்திர கூட்டம் இன்று தொடங்குகிறது. சீனாவின் மிக உயரிய அதிகாரம் கொண்ட இந்த அமர்வு இப்போது கூடும் சூழலில் இது உலகெங்கும் கவனத்தை ஈர்ப்பதாக அமைகிறது.

இரு அமர்வுகள்
இன்று தொடங்கும் இந்த அமர்வு, இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில் வரும் காலத்தில் என்ன மாதிரியான பாலிசிக்கள் இருக்கும் என்பதை இது காட்டும். உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கச் சீனா போராடி வரும் நிலையில், அதற்கேற்ப முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.
ஆலோசனை அமைப்பான சீன மக்கள் அரசியல் கலந்தாய்வுக் கழகத்தின் (CPPCC) கூட்டம், தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) கூட்டம் என இரு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த இரு அமர்வுகளில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வுக் கழகத்தின் (CPPCC) கூட்டம் நேற்று புதன்கிழமை தொடங்கியது. இதில் அந்த அமைப்பில் இருந்து 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் இருந்தும் இதில் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் விவாதங்கள் சீனாவின் முக்கிய கொள்கை விவாதங்கள் குறித்த ஐடியாவை நமக்கு வழங்கினாலும் கூட இதற்கு சட்டமியற்றும் அதிகாரம் இல்லை.
இன்று தொடங்கும் கூட்டம்
சட்டமியற்றும் அதிகாரம் தேசிய மக்கள் காங்கிரஸிடமே இருக்கிறது. அது இன்று வியாழக்கிழமை கூடுகிறது.. சட்டங்களை உருவாக்குதல், அரசியலமைப்பைத் திருத்துதல் மற்றும் அரசு வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் இதற்கு இருக்கும்.
1954ல் நிறுவப்பட்ட இந்த தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கூடுகிறது. அனைத்து மாகாணங்கள், சுயாட்சிப் பகுதிகள், மாநகராட்சிகள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அரசின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 3,000 பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள்.. இவர்களில் பெரும்பாலானோர் கட்சி உறுப்பினர்கள் அல்லது அரசு அதிகாரிகள் ஆவர்.. ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.
ரியல் பவர் யாருக்கு?
இருப்பினும், இந்த 3000+ பேருக்கும் அதிகாரம் இருக்காது. உண்மையான அதிகாரம் என்பது காங்கிரஸ் பிரதிநிதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய நிலைக்குழுவிடம் உள்ளது. இந்த நிலைக்குழு ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒருமுறை கூடுகிறது. தற்போதைய நிலைக்குழுவில் 175 உறுப்பினர்கள் உள்ளனர், இதற்குத் தலைவர் ஜாவோ லெஜி. இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவிலும் (சீனாவின் அமைச்சரவைக்குச் சமமானது) உறுப்பினராக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், மின்சார வாகனங்கள், சூரிய பேனல்கள், மனித உருவ ரோபோக்கள், AI செயலிகள் வரை, சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பப் பதிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் உலக நாடுகள் இந்த கூட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்கும்.
உற்றுக் கவனிக்கும் உலக நாடுகள்
சீனாவில் சிறிய கொள்கை மாற்றங்கள் கூட சர்வதேச அளவில் பெரிய அலைகளை உருவாக்க முடியும். சீனாவில் இந்த கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றும் உரைகளே சீனாவின் எதிர்கால கொள்கையின் சிக்னலாக இருக்கும். இதனால் அமெரிக்கா தொடங்கி அனைத்து உலக நாடுகளும் இந்த கூட்டத்தின் முடிவுகளை உற்றுக் கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications