கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்காக நாதுலா கணவாய் பாதையை திறந்துவிட்ட சீனா
பெய்ஜிங்: திபெத்தில் உள்ள கைலாஷ்-மானசரோவருக்கு புனித யாத்திரை செல்வோருக்காக சீனா நாதுலா கணவாய் பாதையை திங்கட்கிழமை திறந்துவிட்டுள்ளது.
திபெத்தில் உள்ள கைலாஷ்-மானசரோவருக்கு ஏராளமான இந்தியர்கள் ஆண்டுதோறும் புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு செல்வதற்கான லிபுலேக் கணவாய் வழி கடந்த 2013ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்துவிட்டது. இந்நிலையில் கைலாஷ்-மானசரோவருக்கு செல்ல இரண்டாவது வழி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜின்பிங் டெல்லி வந்தபோது இது குறித்து மோடி அவரிடம் தெரிவித்தார். அவர் நாதுலா கணவாய் வழியாக புதிய பாதையை திறந்துவிடுவதாக வாக்குறுதி அளித்தார்.
அதன்படி சிக்கிமை ஒட்டி கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள நாதுலா கணவாய் பாதையை சீனா திங்கட்கிழமை திறந்துவிட்டது. அந்த பாதை வழியாக 250 யாத்ரீகர்கள் கைலாஷ்-மானசரோவருக்கு சென்றனர். அவர்களுக்கு சீன அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த புதிய பாதை மூலமாக வயதான யாத்ரீகர்கள் பேருந்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நாதுலா கணவாய் பாதை வழியாக சென்ற யாத்ரீகர்களில் பலர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் ஆவர். அவர்கள் சீனாவின் இந்த உதவியை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் கைலாஷ்-மானசரோவர் செல்ல 1,000 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23 நாட்கள் யாத்திரையில் 19 நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். இந்த புனித யாத்திரை மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1.80 லட்சம் செலவாகும்.
நேற்று நாதுலா வழியாக சென்றவர்களை பாஜக எம்.பி. தருண் விஜய் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். அவர் கைலாஷ்-மானசரோவரின் முக்கியத்துவம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications