நிலவின் ‘இருண்ட’ பக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சாங் இ-4.. வரலாற்றுச் சாதனை படைத்த சீனா!
நிலாவின் மறுபக்கத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது சீனா.
Recommended Video
பெய்ஜிங்: இருண்டபக்கம் என அழைக்கப்படும் நிலவின் மறுபக்கத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது சீனா.
விண்வெளி, அதில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆய்வில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், நிலவின் மறுபக்கத்தைப் பற்றி ஆராய்வதற்கு தனது விண்கலத்தை அங்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளது சீனா.
பூமியும், நிலவும் ஒரே போன்று தன்னைத் தானே சுற்றி வருவதால், எப்போதும் நிலவின் ஒரு பக்கம் மட்டுமே பூமியில் இருந்து பார்த்தால் தெரியும். எனவே, அதன் மறுபக்கத்தில் சூரிய வெளிச்சம் பட்டாலும்கூட, அது இருண்டபக்கம் என்றே அழைக்கப்படுகிறது.
இதனை நாசா ஏற்கனவே செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆனால், இதுவரை அங்கு எந்த விண்கலமும் தரையிறங்கியது கிடையாது.
சீன விண்கலம்:
இந்நிலையில், நிலவின் மறுபக்கம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (சி.என்.எஸ்.ஏ), பெய்ஜிங் நேரப்படி சரியாக காலை 10.26 மணிக்கு ராக்கெட் ஏவுதளத்திலிருந்து மார்ச் 3பி ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
சேஞ்ச் 4 விண்கலம்:
அந்த ராக்கெட்டில் லூனார் லாண்டர் மற்றும் ரோவர் விண்கலமான சாங் இ- 4(Chang'e 4) இணைக்கப்பட்டது. இந்த சாங் இ- 4 ஆனது நிலவின் பின்புறத்தை படம்பிடித்து அனுப்பும் என்று அப்போது சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விண்கலமானது கடந்த டிசம்பர் 12-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
தரையிறங்கியது:
அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 31-ம் தேதி தனக்குரிய சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது இந்த விண்கலம். பின்னர் இன்று காலை நிலவின் பின்புறம், அதன் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) அது தரையிறங்கியது.
வரலாற்றுச் சாதனை:
இதன் மூலம், நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்கிய விண்கலம் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. ஏனெனில் இதுவரையில் நிலவுக்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கின. இதுவரை கண்டறியப்படாத நிலவின் மறுபக்கத்தில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை. இது வரலாற்றுச் சாதனை என்பதால் சர்வதேச அளவில் சீனாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
புதிய புகைப்படங்கள்:
தரையிறங்கியதும் நிலவின் இருண்ட மேற்பரப்பின் சில புகைப்படங்களை அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. இதனை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலவின் இருண்ட பகுதிக்கு சென்றதும் சாங் இ- 4ன் பூமியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் என்பதால், நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஒரு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு:
தொடர்ந்து நிலவின் மறுபக்க நிலப்பரப்பு மற்றும் உட்பகுதி போன்றவற்றை ஆய்வு செய்து இந்த விண்கலம் புகைப்படங்களை அனுப்ப உள்ளது. நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலவின் மறுபக்கம் பற்றி மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, இந்த விண்கலம் தரும் தகவல்களுக்காக உலக நாடுகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன.
உயிரியல் பரிசோதனை:
அதோடு, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் விதமாக விண்கலத்தில் ஒரு பெட்டகத்துக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள், பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை அடங்கிய 3 கிலோ கொள்கலன் வைக்கப்பட்டு நிலவின் மறுபக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.
லேட்டா வந்தாலும்..
மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா தாமதமாகத்தான் தனது விண்வெளி ஆய்வைத் தொடங்கியது. ஆனால், குறைந்த காலத்தில் மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சாதனைகள் படைத்து வருகிறது. இதற்கு முன் நிலவை நோக்கி சீனா அனுப்பிய சாங்க் இ-3 விண்கலம் 2013-ம் ஆண்டு நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியது. என்பது குறிப்பிடத்தக்கது.