சீனாக்காரர்கள் மூளையோ மூளை.. டன் கணக்கில் கிடக்குது தங்கம்! சைலண்டாய் சம்பவம் செய்யும் டிராகன்!
பெய்ஜிங்: உலக அளவில் டாலருக்கு மாற்று என பல நாடுகள் கூறிவரும் நிலையில் சத்தமில்லாமல் அதற்கான அடித்தளத்தை அமைதியாக அமைத்துக் கொண்டிருக்கிறது சீனா. கடந்த சில தினங்களாகவே சீனா தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. தற்போதைய சூழலில் அந்நாட்டின் வசம் சுமார் 21 லட்சம் கிலோ தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விவரித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்..
உலக பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்க, சீனா அமைதியாக ஆனால் திட்டமிட்டபடி ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அது என்னவென்றால், உலக பொருளாதாரத்தின் அடித்தளமான தங்கத்தை மிகப் பெருமளவில் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்வது.
கடந்த 10 மாதங்களாக, சீனா ஒரு நாள் கூட விடாமல் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை, அந்த நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கம் 74 மில்லியன் அவுன்ஸ். அதாவது சுமார் 20.97 லட்சம் கிலோ என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 254 பில்லியன் டாலர்கள்.

சீனா தங்க கையிருப்பு
சீன அரசு மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கம் வாங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் காரணம் தங்கத்தை வாங்குவதும் விற்பது சுலபம் என்பதோடு, எதிர்காலத்திற்கு பாதுகாப்பான ஆயுதம் தங்கம் தான் என்பதை சீனர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். சீனாவின் தங்கக் கொள்கையின் பின்னால் ரஷியாவின் அனுபவம் ஒரு பெரிய பாடமாக இருந்தது. ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியபோது, மேற்கு நாடுகள் ரஷியாவின் டாலர் சேமிப்பில் ஒரு பகுதியை முடக்கிவிட்டன. ஆனாலும் ரஷ்யாவை முடக்க முடியவில்லை.
டாலர் மாற்று
இதற்கு காரணம் ரஷ்யாவிடம் இருந்த தங்கம். அமெரிக்க டாலரை வைத்து ஒரு நாட்டின் பணத்தை முடக்கலாம், ஆனால் தங்கத்தை யாராலும் தடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்ட சீனா ரஷ்யாவின் பாணியில், இப்போது செயலில் காட்டுகிறது. பல தசாப்தங்களாக மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரையே நம்பி வந்தன. ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு கடன் அதிகரித்துள்ளது, பணவீக்கம் ஏறிவிட்டது, நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது.
யுவான் மதிப்பு
இதனால் தான் சீனா, இந்தியா, துருக்கி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கம் வாங்க தொடங்கியுள்ளன. ஆனால் சீனா அதில் மிகப்பெரிய அளவில் முதலிடத்தில் உள்ளது. ஏன் சீனா தங்கத்தை குவிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது. உலக அளவில், டாலர் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது, யுவான் என்ற சீன நாணயத்தின் மதிப்பை உயர்த்த வேண்டும், எதிர்கால சவால்களுக்கு முன் பாதுகாப்பு தேவை, தங்கம் நாட்டின் பண மற்றும் அரசியல் சக்தியை கூட்டும் என்பது தான் அதற்கு காரணம்.
தங்க முதலீடு
2025இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,600 டாலர் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 38% அதிகம். சீனா தங்கம் வாங்குவதை நிறுத்தாவிட்டால், விலை இன்னும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா உலகில் மிக அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அது பெரும்பாலும் பெண்களிடம் நகைகளாகவே உள்ளது. அரசு அளவில் தங்க கையிருப்பில் போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை என்று விமர்சனம் எழுகிறது.
அமெரிக்க டாலர் வீழ்ச்சி
மெல்ல மெல்ல உலக நாடுகள் டாலரிலிருந்து தங்கத்துக்குத் தங்கள் கவனத்தை மாற்றத் தொடங்கியுள்ளன. அப்போது, சீனாவிடம் இருக்கும் மாபெரும் தங்க கையிருப்பு அந்த நாட்டை அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாக மாற்றும். "டாலரை வீழ்த்துவோம்" என்று சில நாடுகள் கூறும் போது, அதற்கான அடித்தளத்தை அமைதியாக அமைத்து கொண்டு இருப்பது சீனா தான் என்பதில் இப்போது எவருக்கும் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications