சீனாவில் லைட்டரை வைத்து விளையாடிய சிறுவன்... தீப்பிடித்த வணிக வளாகம்: 17 பேர் பலி
பீஜிங்: சீனாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் 9 வயது சிறுவன் லைட்டரை வைத்து விளையாடியபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
குவாங்டாங் மாகாணம், ஹூயிங்டாங் கவுண்டியில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியில் ஒரு குடோன் உள்ளது. அங்கு பெற்றோருடன் வந்திருந்த 9 வயது சிறுவன், தனது கையில் உள்ள லைட்டரில் இருந்து நெருப்பை வரவழைத்து விளையாடியிருக்கிறான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள ஒரு பொருள் மீது விழுந்து தீப்பிடித்தது. அது எளிதில் தீப்பற்றும் பொருள் என்பதால் விரைவாக பற்றி எரிந்ததுடன், அந்த தளம் முழுவதும் மள மளவென தீ பரவியது.
இதுபற்றி தகவல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 45க்கும் மேற்பட்ட வாகனங்களில் 270 வீரர்கள் விரைந்து வந்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் இந்த விபத்தில் 17 பேர் உடல் கருகி இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். மீட்கச் சென்ற 4 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.
தீ விபத்துக்கு காரணமான 9 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த வணிக வளாகத்தின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications