மரணதண்டனை கைதிகளின் உறுப்புகளை தானம் செய்யும் முறை- கைவிட சீன அரசு முடிவு
பீஜிங்: சீனாவில் மரணதண்டனைக்கு உள்ளாகும் கைதிகளின் உறுப்புகளை நீக்கும் முறையினை கைவிடுவதற்கு அவ்வரசு முடிவு செய்துள்ளது.
கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.

உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இப்படி மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து, பிற நோயாளிகளுக்கு வழங்குவது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கத்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் விட்டொழிக்க சீனா திடீரென முடிவு செய்துள்ளது. இதை சீன அரசின் செய்தித்தாள் நேற்று தெரிவித்தது.
இது தொடர்பாக சீன மனித உறுப்பு நன்கொடை கமிட்டியின் தலைவர் ஹூவாங் ஜீபு கூறுகையில், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக மரண தண்டனை கைதிகளின் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அகற்றி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அத்தகையை ஒரு செயலை விட்டொழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
சீனாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, உறுப்பு கிடைப்பதற்காக ஆண்டுக்கு 3 லட்சம் நோயாளிகள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications