விபத்தில் இறந்த பெற்றோர்... 4 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த அவர்களது குழந்தை... சீனாவில் ஆச்சர்யம்
சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று கடந்த 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். குழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர். எனவே, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகளை சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டது.
சரியான வாடகைத்தாய் கிடைப்பதில் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகள் அவர்கள் காத்திருந்தனர். பின்னர் லயோஸ் சென்ற அவர்கள் அங்கு வாடகைத்தாய் ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர். லயோஸ் நாட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
எனவே, அங்குள்ள பெண் ஒருவரின் கருப்பையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கருமுட்டைகள் செலுத்தப்பட்டன. கரு உருவானதும், அப்பெண் சுற்றுலா விசா மூலம் சீனா அழைத்து வரப்பட்டார். அங்கு கடண்டஹ் டிசம்பர் மாதம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
டிஎன்ஏ சோதனை மூலம் அக்குழந்தை இறந்து போன தம்பதியினுடையது என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்தக் குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்த்து வருகின்றனர்.
இறந்து போனவர்களின் கருமுட்டையிலிருந்து குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.