ஈரானுக்கு ஆயுத சப்ளை செய்யும் சீனா? ரகசியமாக தரையிறங்கிய சரக்கு விமானங்கள்.. பரபரப்பு தகவல்
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் தனது வான்வெளி பரப்பை முற்றிலுமாக மூடி உள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் சீனாவின் சரக்கு விமானங்கள் ஈரானில் ரகசியமாக தரையிறங்கி உள்ளது. இதனால் சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் கடுமையாக மோதி வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. இந்த மோதலுக்கு நடுவே கடந்த ஆண்டு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது.

இதையடுத்து ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனையாக மாறும். ஏனென்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலிடம் மட்டும் தான் அணுஆயுதம் உள்ளது. இதனால் ஈரான் கைக்கு அணுஆயுதம் செல்வது அந்த பிராந்தியத்தில் இஸ்ரேலின் செல்வாக்கை குறைக்கும்.
இதனால் அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல், ஈரானின் அணுஆயுத தயாரிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது. இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரானை தாக்கியது. ஈரானின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. தற்போது இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. மோதல் உச்சமடைந்து போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் ஈரான் தனது வான்வெளி பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது. இஸ்ரேல் உடனான மோதல் வலுத்துள்ளது. இதனால் அந்த நாட்டுக்கு ஆதரவாக பிற நாடுகளின் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தலாம். இதனால் ஈரான் தனது வான்வெளி பரப்பை மூடியுள்ளது. இதன்மூலம் தங்களின் வான்வெளி பரப்புக்குள் நுழையும் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தலாம். இப்படியான சூழலில் தான் தற்போது சீனாவின் சரக்கு விமானங்கள் ஈரானில் தரையிறங்கி உள்ளது.
இந்த விமானங்கள் ஈரான் வான் எல்லையில் நுழைந்தவுடன் டிரான்ஸ்பாண்டரை ஆஃப் செய்து பயணித்துள்ளது. இதுதான் விமானத்தின் நகர்வை கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக்ஸ் டிவைசாகும். டிரான்ஸ்பாண்டரை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே அந்த விமானத்தின் நகர்வை கண்டுபிடிக்க முடியும். ஆனால் விமானத்தின் நகர்வை மறைக்க அது ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரகசியமாக சீனா தனது விமானங்களை ஈரானில் தரையிறக்கி உள்ளது.அதேபோல் ஈரான் தனது வான்வெளி பரப்பை மூடிய நிலையில் சீனாவின் விமானம் அங்கு சென்றுள்ளது. இது சீனா - ஈரான் இடையேயான ஒருங்கிணைப்பை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
இதுதான் தற்போது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. மேலும் ஈரானுக்கு ஆயுத சப்ளை வழங்க சீனா தனது சரக்கு விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த நடவடிக்கை என்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதுபற்றி ஈரான் மற்றும் சீனா தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications