ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
சீனாவில் உள்ள நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக பல கோடிகளை கொட்டி கொடுத்து பணமழையில் நனைய வைத்துள்ளது.
பீஜிங்: சீனாவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதாக ஒருபக்கம் சொல்லப்படும் நிலையில் அந்த நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக பல கோடிகளை கொட்டி கொடுத்து பணமழையில் நனைய வைத்துள்ளது.
வருடம் முழுவதும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து ஊழியர்களை பல நிறுவனங்களும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன.
ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல லட்சங்கள் வரை ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென ஒரு கொள்கையை பின்பற்றி அறிவித்து ஊழியர்களை திளைக்க வைக்கிறது. சில சமயங்களில் கார்களைக் கூட திடீரென கிப்ட் ஆக சில நிறுவனங்கள் கொடுத்து விடுகின்றன.

கோடிகளை கொட்டி கொடுத்து
குஜராத்தில் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கார்களை பரிசாக அளித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். நிறுவனங்களின் தாராள மனசை காட்டும் விதமாக இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டு வருகின்றன. அதேபோன்ற ஒரு நிகழ்வுதான் சீனாவில் நடந்துள்ளது. ஆனால், ஆயிரம், லட்சங்களில் இல்லை.. கோடிகளை கொட்டி கொடுத்து ஊழியர்களை திளைக்க வைத்து இருக்கிறது சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம்.

ஹெனன் மைன் என்ற நிறுவனம்
ஸ்டேஜில் மலை போல பணக்கட்டுகளை அடுக்கி வைத்து அள்ளி அள்ளி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அந்த சீன நிறுவனம். இந்த சம்பவம் குறித்த முழு விவரத்தையும் இங்கே காணலாம். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன் என்ற நிறுவனம் உள்ளது. கிரேன் போன்ற கனரக வானங்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் இந்த நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கொரோனா நேரத்திலும் 23% வருவாய்
இந்த நிறுவனத்தில் சுமார் 5,100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் 9.16 பில்லியன் யுவான் (1.1 பில்லியன் டாலர்)ஆக உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்ட போதிலும் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததால் ஹெனன் மைன் நிறுவனம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

பணத்தை மலை போல குவித்த நிறுவனம்
இதனால், ஊழியர்களை நன்கு கவனிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த நிறுவனம் ஊழியர்களை பணத்தை வாரி இறைத்துள்ளது. இதற்காக நிறுவன வளாகத்தில் கடந்த 17 ஆம் தேதிக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹெனன் மைன் நிறுவனம் நிகழ்ச்சி மேடையிலேயே பணத்தை மலை போல குவித்து வைத்தது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு பணக்கட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தை பார்த்த ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்துள்ளனர்.

மேனேஜர்களுக்கு ரூ. 6 கோடி
சிறப்பாக பணியாற்றிய மூன்று சேல்ஸ் மேனஜர்களுக்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக கொடுத்துள்ளது. நிறுவனத்தின் சிறந்த ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 40 பேருக்கு ஒரு மில்லியன் யுவானிற்கு மேலாக போனசாக கொடுத்துள்ளது. அதுபோக பணத்தை எண்ணும் போட்டியையும் ஊழியர்களுக்கு வைத்து இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக தாள்களை எண்ணியவர்களுக்கு தனியாக ஒரு பரிசும் கொடுத்துள்ளது.

30 சதவீத சம்பள உயர்வு வேற..
இதற்காக மட்டும் 12 மில்லியன் யுவான் தொகையை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த போனஸ் தொகை போக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 சதவீத சம்பள உயர்வையும் அளித்து பணமழையில் குளிக்க வைத்து இருக்கிறது. நிறுவனத்தின் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய பக்கம் எல்லாம் பணம் தான் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஊழியர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் வெளியாகியது.












Click it and Unblock the Notifications