பூசாரி புல்லட்ல போனா.. கடவுள் பிளைட்ல போவாரு.. இது கதையல்ல நிஜம்!
சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சீன தெய்வத்தை விமானத்தில் அதுவும் பிசினஸ் வகுப்பில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர்: சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சீன கடல் தெய்வங்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனா நாட்டில் கடல் தெய்வமாக கருதப்படுவது மஸு என்பதாகும். இந்த சிலையை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா எடுத்துச் செல்ல பக்தர்கள் திட்டமிட்டனர்.
இந்த தெய்வமானது மீனவர்களும், கப்பல் மாலுமிகளுக்கும் காவல் தெய்வம் என்று நம்பப்படுகிறது. இதற்கான கோயில் பியூஜியன் மாகாணத்தில் உள்ள ஒரு தீவில் உள்ளது.

6 அடி உயரம்
சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த சீனா தெய்வத்தை தென் சீனாவில் உள்ள ஜியாமென்னிலிருந்து கோலாலம்பூருக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, 130 பக்தர்கள் புடைச்சூழ மஸுவும், மேலும் இரு தெய்வங்களும் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்தனர்.

டிக்கெட் எவ்வளவு?
ஜியாமென் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவருக்கு 2,091 யென்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். 2091 யென்கள் என்பது 300 டாலர்களாகும் (சுமார் ரூ.20,400). மஸுவுக்கு இடம் இல்லாததால் விமானத்தில் இருந்த சில இருக்கைகள் நீக்கப்பட்டன.

பூமியில் ரெஸ்ட்
பக்தர்களோ விமானத்தில் கடவுளை பயணம் செய்ய வைத்தால் வானத்திலிருந்து பூமிக்கு ஓய்வு எடுக்க வருவதாகவே இதை பாவிக்கின்றனர். அதன் பின்னர் மஸுவுடன் மலேசியாவின் மலாக்கா நகருக்கு பஸ்ஸில் பயணம் செய்தனர்.

லாரியில் பயணம்
அதன்பின்னர் அனைத்து தெய்வங்களையும் எடுத்துக் கொண்டு லாரியில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மஸு விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் மகிழ்ச்சியையும் திகைப்பையும் அளிக்கிறது. தெய்வத்தை விமானத்தில் கொண்டு செல்வதை பார்த்தால் அனைவருக்கும் ஆசி வழங்குவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்
சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் என்ற தலைவலியிலிருந்து தெய்வங்களும் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி தப்ப முடியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் தெய்வங்களையும் விடாமல் சோதனை செய்ததால் 4 மணிநேரம் தாமதமாகியது.

மஸுவின் ஆசி
மஸுவின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த தெய்வத்தை சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அது சரி இந்த காலத்தில் பூசாரியே புல்லட்டில் போகும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுவிட்டது. அண்ட சராசரத்தையும் ஆளும் தெய்வங்கள் விமானத்தில் அதுவும் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கு!












Click it and Unblock the Notifications