இலங்கை பாணியில் சீனா மீனவரை சுட்டுக் கொன்றது தென்கொரியா கடற்படை!
சியோல்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்ததைப் போல தென்கொரியாவிடன் கடற்படை சீனா மீனவர் ஒருவரை படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளான கச்சத்தீவு உள்ளிட்டவற்றை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்து கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாகக் கூறி கடந்த கால் நூற்றாண்டு காலமாக காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுப் படுகொலை செய்து வருகிறது இலங்கை கடற்படை.
உலகிலேயே மீன்பிடிக்க சென்றதற்காக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் கடற்பரப்பாக வங்கக் கடல் உருமாறியது. தற்போது இலங்கை கடற்படை பாணியில் தென்கொரியாவும் அத்துமீறி மீன்பிடிப்பதாக கூறி சீனா மீனவர்களை படுகொலை செய்யத் தொடங்கியுள்ளது.
தென்கொரியாவின் வடக்கு ஜியோலா மாகாணத்தில் இருந்து 144 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் சீனா மீனவர்கள் 80 டன் எடையுள்ள படகு ஒன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட தென்கொரியா கடற்படை வீரர்கள், சீனா மீன்பிடிப் படகை சுற்றி வளைத்தனர். பின் படகுக்குள் குதித்த தென்கொரியா கடற்படை வீரர்கள் சோதனைகள் நடத்தினர்.
இதற்கு படகில் இருந்த மீனவகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய சோங் என்ற சீனா மீனவர் மீது தென்கொரியா கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து தென்கொரியா கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மீனவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே தென்கொரியாவின் மஞ்சள் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக 220 சீனா படகுகளை தென்கொரியா கைப்பற்றி வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான மீனவர்களையும் தென்கொரியா கைது செய்துள்ளது.
அத்துடன் 2011ஆம் ஆண்டு சீனா மீனவர்களால் தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் இதே மஞ்சள் கடற்பரப்பில் கொல்லப்பட்டார். தற்போது சீனா மீனவரை தென்கொரியா சுட்டுக் கொன்றிருப்பதால் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.