தைவானில் களைகட்டிய சித்திரை திருவிழா!
தைவானில் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன கலந்து கொண்டனர்.
தைபே: தைவானில் தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய இத்திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
தைவான் தமிழ்ச்சங்கமானது தைவான் வாழ் தமிழர்களை இனைக்கும் வகையில் ஜனவரி 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் மற்றும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் சித்திரை திருவிழாவனது கடந்த 13-05-2017 சனிக்கிழமை அன்று தைபே தேசிய தொழில்நுட்ப்ப பல்கலைகழகத்தில் வைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவானின் அனைது நகரங்களில் இருந்தும் குறிப்பாக ஷிஞ்சு, தைச்சூங், ஹொஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து அனைவரும் வந்து கலந்து கொண்டார்கள்.

தைவானில் சித்திரை திருவிழா
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா தைபே அசோசியேஷனின் முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன், தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைகழகத்திலிருந்து பேராசிரியர் ஷியாவ்-ஷிங் சென், டீன், சர்வதேச மாணவர்கள் விவகாரத்துறை, பேராசிரியர் ஷெங்-துங் ஹுவாங் மற்றும் பேராசிரியர் ஷென்-மிங் சென், இரசாயன பொறியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை, ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்
சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி சித்திரை விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது. தைவான் கவிஞரும் திருக்குறளை சீன மொழிக்கு மொழிபெயர்த்தவரும், தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான முனைவர் யூசி அவர்கள் துவக்கவுரையாற்றினார். அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து கூறினர்.

இளம் ஆராய்ச்சியாளர் விருது
விழாவின் முத்தாய்ப்பாக தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வருடம் முதல் தைவான் தமிழ்ச்சங்கத்தின் "இளம் ஆராய்ச்சியாளர் விருது" வழங்கப்பட்டது. இரசாயன பொறியியலுக்கான விருதை மேதகு ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள் வழங்க திரு. ராஜ் கார்த்திக், தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உயிரியலுக்கு விருது
உயிரியலுக்கான விருதை முனைவர் யூசி வழங்க திரு செல்வபிரகாஷ், தேசிய சியோ துங் பல்கலைக்கழகம், அவர்கள் பெற்றுக்கொண்டார். இயற்பியலுக்கான விருதை துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் அவர்கள் வழங்க திரு பாக்கியராஜ், தேசிய தைவான் பல்கலைக்கழகம், அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பதக்கமும் பத்திரமும்
விழாவில் கடந்த வருடத்தில் தைவானின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களை கெளரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு பத்திரம் கொடுக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் யூசி மற்றும் துணைதலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் அவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகையும் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா
விழாவில் கீதாஞ்சலி குழுவினரின் பரதநாட்டியம், செல்வி ராஜலெட்சுமியின் கரகாட்டம், ரஞ்ஜினி அவர்களின் தமிழ் பாடலுக்கு மணிப்புரி நடனம், சிறுவர் சிறுமியரின் நடனம் மற்றும் உடையலங்கார காட்சிகள், புதியீடு குழுவினரின் விவசாயிகள் நிலை பற்றிய நாடகம் மற்றும் ஆடல் பாடல்கள் என்று கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. தைவான் மற்றும் அமெரிக்க கலைஞர்களும் தங்களுடைய நிகழ்ச்சிகளை மேடையில் நிகழ்த்தினார்கள்.

சித்திரம் பேசுதடா
தைவானில் ஆராய்ச்சி படிப்பை முடித்த முனைவர் ஜெ.வினாயகம் அவர்களின் "சித்திரம் பேசுதடா" என்ற கவிதை தொகுப்பை சங்கத்தின் தலைவர் முனைவர் யூசி வெளியிட துணைத்தலைவர் ரமேஷ் பெற்றுக்கொண்டார். தைவான் தமிழ்ச்சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள் உதயணன் மற்று ராஜு சுகுமாரன் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டுக்கு கோப்பை
சிறுவர் சிறுமியருக்கான டிராயிங்போட்டி நடத்தப்பட்டு அவை விழா அரங்கின் முகப்பில் பார்வைக்காக வைக்கப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கத்தின் கிரிக்கெட் கோப்பை 2017 ல் வெற்றி பெற்ற அணியினருக்கு மனிஷ் ஷா அவர்கள் கோப்பைகள் வழங்கினார்.

தேசிய கீதத்துடன் நிறைவு
விழாவில் சுமார் 450 பேர் கலந்துகொண்டார்கள். தமிழ்ச் சங்கத்தின் பொது செயலாளர் முனைவர் ஆகு பிரசண்ணன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் துணை பொதுசெயலாளர் சு. பொன்முகுந்தன் , பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் முனைவர் வீரப்பன் மணி ஆகியோருக்கும் நன்றி கூற தேசிய கீதத்துடன் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது.












Click it and Unblock the Notifications