ஹெலிகாப்டர் ஊழல்; தரகரிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு இத்தாலி கோர்ட் அனுமதி
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும்.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழலில் இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கியூசெப்பி ஆர்சி, பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் புருனோ ஸ்பாக்னாலினி, ஆகியோர் இத்தாலி போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி உத்தரவிட்டார். சி.பி.ஐ. விசாரணை நடத்தி இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, ஐரோப்பிய இடைத்தரகர்கள் கார்லோ ஜெரோசா, கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹாசெக்கி உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் பேரத்தில் முக்கிய தரகராக செயல்பட்ட கெய்டோ ரால்ப் ஹாஸ்சிகே, சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். கெய்டோவை சுவிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை இத்தாலிக்கு நாடுகடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை அடுத்து அவர் இத்தாலி கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ரால்ப் ஹாஸ்சிகேவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இத்தாலி நீதிமன்றம் அவரை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.