தீவிரவாதிகள் அச்சத்தால் சட்டங்களை கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா! மக்களின் சுதந்திரம் பாதிக்கும்
கான்பெரா: தீவிரவாதிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையின்போது நாட்டு பொதுமக்கள் சுதந்திரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சில முஸ்லிம்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்களை நடத்தப்போவதாகவும், பொதுமக்கள் தலைகளை வெட்டி எறிய உள்ளதாகவும் அந்த நாட்டு உளவுத்துறை அரசுக்கு அறிக்கையளித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உச்சகட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அனுதாபிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய பாதுகாப்பு படையினர் சிலரை கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடுமையான சட்டங்கள்
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் தீவிரவாத ஒழிப்பு சட்டங்களை கடுமையாக்கவும், புதிய சட்டங்களை கொண்டுவரவும் அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டங்கள் இந்த வாரத்திலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இதன்படி, சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கவும், சந்தேகப்படும் நபர்களை உடனடியாக கைது செய்யவும் போலீசாருக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் நகரங்களுக்கோ அல்லது பகுதிகளுக்கோ ஆஸ்திரேலியர்கள் பயணிப்பதும் தடை செய்யப்பட உள்ளது.

மக்களின் சுதந்திரம் பெரிதல்ல
இதுபோன்ற சட்டங்களால் குடிமக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து வந்துவிட்ட நிலையில் சுதந்திரத்தை இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

சட்டத்தில் கட்டுப்பாடு வரும்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அந்த நாட்டு பிரதமர் டோனி அப்போட் "சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு உடனடி தேவையாக உள்ளது பாதுகாப்புதான். ஏனெனில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் நமது நாடு சிக்கியுள்ளது. கூடுதலாக அரசு கட்டுப்பாட்டை விதித்தால், அதன் மூலம் கூடுதலாக சிலருக்கு பாதுகாப்பு கிடைக்கப்போகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய குடிமக்களாக இருந்து கொண்டு தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொலை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது" என்றார்.

எதிர்க்கட்சிகளும் பாராட்டு
இதனிடையே அரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன. அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டங்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரம் மக்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவை விருப்பம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications