குவைத்தில் நடந்த ஏழைகளுக்கான ஆடை சேகரிப்பு முகாம்: வாரி வழங்கிய மக்கள்
குவைத்: குவைத்தில் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்திய ஆடை சேகரிப்பு முகாமில் ஆயிரம் கிலோ ஆடைகள் சேகரிக்கப்பட்டது.
குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக 'ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், பாலஸ்தீன் மற்றும் குவைத்' உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்பு முகாமை 30/01/2015 அன்று குவைத் தமிழ் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது.

குறுகிய கால அவகாசம் தரப்பட்டாலும் சுமார் 1 டன் (ஆயிரம் கிலோ) ஆடைகளை மக்கள் அன்பளிப்பாக அள்ளி வழங்கினர். அவற்றை சேகரித்து குவைத்தில் இயங்கும் பூப்யான் வங்கி (Boubyan Bank) துணையுடன் ஒரே நாளில் 56,000 கிலோ (56 டன்) ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்த வளைகுடா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குவைத் (Gulf University for Science & Technology, Kuwait) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆடைகளை அள்ளி வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆடைகளை சேகரித்து அல்லல்படும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வோம் என்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் பல்வேறு காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கபட்ட திருப்பூர், முஸாஃபர் நகர், ஜம்மு காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உதவித் தொகைகளை இச்சங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications