கொரோனா இன்னும் முடியல! ஒமிக்ரான் மோசமானது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா: கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பன உள்ளிட்ட பல தகவல்கள் தவறாக பரப்பப்படுகின்றன என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலையில் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினம் தொடர்ந்து மத்திய அரசு எச்சரித்து வருகிறது. பொதுமக்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் கொரோனா பரவல் தொடர்பான போலி தகவல்கள் பரப்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. அதே நேரத்தில் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா தடுப்புக்கான தொழில்நுட்ப பிரிவு தலைவருமான மரியா வான் கெர்கோவ் (Maria Van KerKhove) கூறியதாவது:

தவறான தகவல்கள்
கொரோனா குறித்து அதிகளவில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. குறிப்பாக ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது, கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்து விட்டது என்பன போன்ற தவறான தகவல்கள் வேகமாக பரவுகிறது. மேலும் கொரோனா வைரஸின் கடைசி வகை தான் ஒமிக்ரான் எனவும் கூறுகின்றனர். இது பெரும் குழப்பத்துக்கு காரணமாக உள்ளது.

8 சதவீதம் வரை அதிகரிப்பு
மேலும் தற்போது உலகில் கொரோனா பரிசோதனை குறைந்து இருந்திருந்தாலும் 8 சதவீதம் வரை பாதிப்பு அதிகரித்துள்ளது. 11 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசி 30 நாள் பாதிப்பில் 99.9 சதவீதம் பேர் ஒமிக்ரானால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஏ2 வகையில் 75 சதவீதமும், பிஏ 1 வகையில் 25 சதவீத பாதிப்பும் நேர்ந்துள்ளது. இது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

பாதுகாப்பாக இருக்கனும்
ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். பிஏ 1யை காட்டிலும் பிஏ 2 வகை வைரஸின் தீவிரத்தன்மை அதிகமாக உள்ளது என்பதை இன்னும் நாங்கள் கண்டறியவில்லை. இருப்பினும் பிஏ 2 வகையால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஆவர். இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்‛‛ என்றார்.

உருமாற்றம்
மேலும் வைரஸ் உருமாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குனர் மைக் ரையான் கூறுகையில், ‛‛வைரஸின் ஆன்டிஜெனிக் திரிபு என்பது ஒரு இயற்கையான செயல்முறையாகும். இங்கு தான் வைரஸ் மாறுபாட்டு ஏற்படும். அதாவது வைரஸின் இரண்டு வெவ்வேறு திரிபு இணைந்து புதிய வகையை உருவாக்கும். தற்போதைய ஒமிக்ரான் வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ மாத கணக்கில் வேண்டுமானாலும் காத்திருக்கும். பெரும்பாலான வைரஸ்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. இதனால் வைரைஸ எதிர்க்கும் சக்தி இல்லாதவர்களை ஒமிக்ரான் எளிதில் தாக்கும்‛‛ என எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications