விமானத்தைப் பிடிக்கும் அவசரத்தில் குழந்தையை டாக்சிக்குள்ளேயே விட்டுப் போன அப்பா, அம்மா!
துபாய்: விமானத்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஒரு தம்பதி தங்களது ஐந்து வயதுக் குழந்தையை டாக்சிக்குள்ளேயே மறந்து விட்டுப் போ் விட்டனர். துபாய் விமான நிலையத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.
2 மணி நேரம் அந்த சிறுவன் டாக்சிக்குள்ளேயே தூங்கியபடி இருந்துள்ளான். பின்னர் போலீஸார் குழந்தையை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தத் தம்பதி தங்களு ஐந்து வயதுக் குழந்தையுடன் டாக்சியில் துபாய் விமான நிலையம் வந்தனர். விமானத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற பதட்டத்துடன் வந்த அவர்கள் விமான நிலையத்தில் இறங்கியதும் அவசரம் அவசரமாக விமானத்தைப் பிடிக்க ஓடினர். போகிற அவசரத்தில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டனர்.
இத்தனைக்கும் டாக்சியில் வைத்திருந்த லக்கேஜ்களையெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்த அந்த தம்பதி, பெற்ற குழந்தையை மட்டும் வசதியாக மறந்து விட்டனர்.
போர்டிங் பாஸ் பெறும் கவுண்டருக்குப் போன பின்னர்தான் குழந்தையை மறந்தது அவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸிடம் ஓடினர். போலீஸார் டாக்சியைத் தேடியபோது அது போய் விட்டிருந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா மூ்லம் டாக்சியைக் கண்டறிந்து டாக்சி எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.
டாக்சி டிரைவரும் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இப்படி பதட்டமாக கழிந்தது. பின்னர் டாக்சி டிரைவர் மீண்டும் விமான நிலையம் வந்து குழந்தையைப் பத்திரமாக ஒப்படைத்தார். அதன் பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications