மதநல்லிணக்கதுடன் வாழ இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்: சீனாவிற்கு தலாய்லாமா அறிவுரை
ஷில்லாங்: மதநல்லிணக்கத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என சீனாவிற்கு அறிவுறுத்தியுள்ளார் தலாய்லாமா.
கடந்த 1951-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்தது. அதனைத் தொடர்ந்து, 1959ம் ஆண்டு புத்த மதத்தலைவர் தலாய்லாமா, இந்தியாவின் தர்மசாலா பகுதிக்கு வந்து அடைக்கலமானார்.

அங்கிருந்தபடி, தொடர்ந்து திபெத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார் தலாய்லாமா. இந்நிலையில், முதன்முறையாக மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்ற தலாய்லாமா, அங்கு நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு மக்கள், பல்வேறு மொழிகள், பலவேறு புனித நூல்கள் மற்றும் பல்வேறு பழக்கவழக்கங்களுடன் இந்தியாவில் மக்கள் மதநல்லிணக்கதுடன் வாழ்ந்து வருகின்றனர். எப்படி வாழவேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து சீனா கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய நாடு, அற்புதமான மக்கள் வாழ ஏற்ற ஒரு நல்ல நாடாகும். நாங்கள் சீனாவிடமிருந்து பிரிவினையை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சீனாவின் பொதுவான பொருளாதார முன்னேற்றம் மற்றும் நலனையே எதிர்பார்க்கிறோம்.
அமைதியான வாழ்க்கை என்கிற இந்தியாவின் குறிக்கோள், சிறந்த ஒரு ஆசியாவை உருவாக்கும். அது சிறந்த ஒரு உலகத்தை படைக்கும். 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்தியா அஹிம்சை வழியை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படியே இன்றும் வாழ்ந்து வருகிறது.
இந்தியா ஒரு மதசகிப்பு தன்மை மற்றும் கலாச்சாரத்தை கொண்ட நாடாக விளங்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications