தாவூதின் சொத்துக்களை முடக்க விசாரணையை துவங்கிய அமீரக அரசு
துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் விசாரணையை துவங்கியுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்து இந்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சொத்துக்கள் குறித்து அந்நாட்டு அரசு விசாரணையை துவங்கியுள்ளது. அண்மையில் அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் சென்றிருந்தார்.
அப்போது தாவூதின் சொத்துக்கள் பட்டியலை அமீரக அரசிடம் அளித்து அவற்றை முடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தாவூத்தின் சொத்துக்கள் குறித்து அமீரகம் விசாரணையை துவங்கியுள்ளது. தாவூதின் பண பலத்தை அழிக்க நினைத்த இந்திய அரசுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தி ஆகும்.
இந்தியா அளித்துள்ள பட்டியலை வைத்து தான் அமீரக அரசு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அமீரகத்தில் உள்ள தாவூதின் சொத்துக்கள் முடக்கப்படும். அமீரகத்திடம் அளிக்கப்பட்ட பட்டியல் நம்பத்தகுந்த ஆதாரங்களை வைத்து தயாரிக்கப்பட்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பட்டியலில் துபாயில் செயல்பட்டு வரும் கோல்டன் பாக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரும் உள்ளது. அந்த நிறுவனத்தை தாவூதின் சகோதரர் அனிஸ் இப்ராஹிம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சில ஹோட்டல்களின் பெயர்களும் உள்ளது.
தாவூதுக்கு 10 நாடுகளில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துக்கள் அனைத்தும் பினாமிகளின் பெயர்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.