பெனாசிர் படுகொலைக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரமான தாக்குதல் இதுதான்!
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலைக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் நேற்று நடந்த பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதல்தான்.
பெஷவார் ராணுவப் பள்ளிக்கூடத்தில் புகுந்து பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதல் ஈர மனம் கொண்ட நெஞ்சங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிதாபமாக இறந்து போன குழந்தைகளுக்காக மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதயமே இல்லாத பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தும் கொடும் தாக்குதல்கள் தொடர் கதையாகி வருவது என்னவோ நிற்காமல் தொடரவே செய்கிறது.

பெனாசிர் படுகொலை
கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். கராச்சியில் நடந்த ஊர்வலத்தின்போது நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி பெனாசிர் உள்பட 130 பேர் கொல்லப்பட்டனர். அதையும் தாலிபான்கள்தான் நடத்தியதாக கூறப்பட்டது.

லாகூர் மசூதித் தாக்குதல்
2010ம் ஆண்டு மே 28ம் தேதி லாகூரில் உள்ள அகமதி இஸ்லாமிக் பிரிவு மசூதிகள் இரண்டு குறி வைத்துத் தாக்கப்பட்டன. இதில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குவெட்டா தாக்குதல்
அதேபோல கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி குவெட்டா நகரில் ஹஸரா ஷியா முஸ்லீம் மக்கள் மீது நடந்த பயங்கர தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

பெஷாவர் சர்ச்சில் கிறிஸ்துவர்கள் மீது
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பெஷாவரில் உள்ள ஒரு சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களை தலிபான் தீவிரவாதிகள் கொடூரமாக தாக்கியதில் 80 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

நேற்று நடந்த கொடும் தாக்குதல்
அதே பெஷாவரில்தான் நேற்று நடந்த தாலிபான் தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 132 பேர் குழந்தைகள் என்பது கொடுமையானது, வேதனையானது.

அப்பாவிகளைக் குறி வைப்பது தாலிபான் ஸ்டைல்
பாகிஸ்தானில் அப்பாவி மக்களை, அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை தாலிபான்கள் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications