மணிலாவை மிரட்டும் சூறாவளி 'ராம்மசன்': 4 பேர் பலி, 1.5 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை ராம்மசன் என்ற சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இதையடுத்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணிலாவில் உள்ள நிதி சந்தைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளிகளில் இது தான் சக்திவாய்ந்தது ஆகும். இந்த சூறாவளி ஏற்கனவே கிழக்கு தீவுகளை தாக்கி அங்குள்ள மரங்களை பிடுங்கி வீசி, மின் இணைப்புகளை துண்டித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக காரணமாக இருந்த ஹயான் சூறாவளியின் தாக்கத்தில் இருந்தே பிலிப்பைன்ஸ் மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் ராம்மசன் வந்து தாக்கியுள்ளது.
மணிலாவில் இன்று மணிக்கு 150 கிமீ வேகத்தில் காற்று அடிப்பதுடன் கனமழையும் பெய்து வருகிறது. ராம்மசனால் மணிக்கு 30 மிமீ அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூறாவளி மணிலாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தாய்லாந்து மொழியில் ராம்மசன் என்றால் இடியின் கடவுள் என்று அர்த்தமாம்.












Click it and Unblock the Notifications