தோண்ட தோண்ட பிணங்கள்.. எங்கும் ரத்த வாடை! 2,500 ஐ தாண்டிய துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இன்று அதிகாலை துருக்கியின் தெற்கு மத்திய பகுதியான நர்டஹியிலிருந்து 23 கிலோ மீட்டர் கிழக்கே 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வடக்கு சிரியாவிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டன.

2 நிலநடுக்கங்கள்
1 நிமிடம் நீடித்த இந்த சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அடுத்து 7.5 என்ற ரிக்டர் அளவில் 2 வது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்க பதிவானது. நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

3 வது நிலநடுக்கம்
திரும்பும் திசையெல்லாம் சிதைந்த கட்டிடங்கள், அதில் சிக்கிய மனிதர்கள், இறந்து கிடக்கும் உடல் என இரத்த வாடையும், பிணக்குவியலுமாக காட்சி தருகிறது. இதற்கிடையே மூன்றாவது முறையாக 6 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் மீட்புப்பணிகளில் ஈடுபடுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

30 முறை நில அதிர்வு
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து 30 முறை நில அதிர்வுகள் அந்நாட்டில் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது. ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. இந்த தொடர் நில அதிர்வுகளால் மீட்புப் பணிகள் தொய்வடைந்து உள்ளன.

மோசமாகும் நிலை
அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக நிலநடுக்கத்தால் சேதமடைந்த, வெடிப்புகள் ஏற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்படக்கூடிய ஆப்டர் ஷாக் எனப்படும் இந்த அதிர்வுகளால் பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.

2,500-ஐ கடந்த உயிரிழப்பு
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் ஆயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே இரு நாடுகளையும் சேர்த்து மொத்தம் 2,500 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

உலக நாடுகள்
இதில் துருக்கியில் 1,633 பேரும், சிரியாவில் 921 பேரும் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்து இருக்கும் துருக்கி மற்றும் சிரியா மக்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications