தேவ்யானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை ரத்து செய்து அமெரிக்க கோர்ட் உத்தரவு
நியூயார்க்: முன்னாள் இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே (வயது 39). இவர் இந்தியாவில் இருந்து அழைத்து வந்த தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள், வாக்குமூலம் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு தனது பிள்ளைகளைப் பள்ளியில் விட ச் சென்ற போது, பொது இடத்தில் வைத்து கைது செய்யப் பட்டார் தேவ்யானி. கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்து அவர் அவமதிக்கப்பட்டார். இந்தியத் துணைத் தூதரை அமெரிக்கா இவ்வாறு நடத்தியதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. இதனால் அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் விழும் நிலை ஏற்பட்டது.
ஆனபோதும் அமெரிக்கா தன் நிலையிலிருந்து மாறவில்லை. இந்நிலையில் தேவ்யானிக்கு முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு கிடைக்கத்தக்க விதத்தில் அவர் ஐ.நா.வில் இந்திய நிரந்தர தூதுக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா இடையேயான தலைமையக உடன்படிக்கை பிரிவு 15-ன்படி சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் கடந்த 8-ந்தேதி வழங்கப்பட்டன.
இதற்கிடையே விசா மோசடி தொடர்பாக தேவ்யானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேவ்யானி, இந்தியா திரும்பவும் உத்தரவிடப்பட்டது. இதனால் தேவ்யானி தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தாயகம் திரும்பினார். அவர் நாடு திரும்பினாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அப்படியே நிலுவையில் இருக்கும் என அமெரிக்க அரசு வக்கீல் பிரீத் பராரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிரடியாக அமெரிக்க நீதிமன்றம் தேவ்யானி கோப்ரகடே மீதான குற்றச்சட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேவ்யானி இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொண்ட போதும், தொடர்ந்து அவர் மேலும் பல புதிய குற்றச்சாட்டுக்களை சட்டப்படி சந்திக்க வேண்டி வரலாம் என அமெரிக்க வக்கீல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications