மூக்கு சிகிச்சையில் அதிருப்தி: இ.என்.டி டாக்டரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற நோயாளி
பீஜிங்: சீனாவில் சிகிச்சையில் அதிருப்தி அடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சை அளித்த டாக்டரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
சீனாவின் ஹிலாங்ஜியங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் கண், காது மற்றும் தொண்டை பிரிவின் தலைமை டாக்டர் சன் டாங்டோ. இவர் வழக்கம் போல, கடந்த திங்களன்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
சுமார் 10 மணியளவில் கையில் இரும்புக் கம்பியுடன் அவரது அறைக்குள் நுழைந்த மர்ம நபர், டாங்கோவைப் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த டாங்டோ உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலன் அளிக்காமல் டாங்கோ உயிரிழந்து விட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டரை இரும்புத் தடியால் தாக்கிய நபரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், குற்றவாளி டாங்கோவிடம் மூக்கு சிகிச்சைப் பெற்றவர் என்பதும், டாங்கோவின் சிகிச்சையில் திருப்தி ஏற்படாததால் அவரைத் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.