எபோலா காய்ச்சலுக்கு சோதனை அடிப்படையில் மருந்து கொடுக்கப்பட்ட லைபீரிய டாக்டர் மரணம்
மான்ரோவியா: லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 3 டாக்டர்களுக்கு சோதனை அடிப்படையில் இசட்மாப் என்ற மருந்து கொடுக்கப்பட்டது. அந்த மருந்து கொடுக்கப்பட்ட டாக்டர்களில் ஒருவர் மரணம் அடைந்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக லைபீரியாவில் தான் வைரஸின் தாக்கம் அதிகம் உள்ளது. எபோலா வைரஸ் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோனில் 1, 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் லைபீரி்ய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த இசட்மாப் என்ற மருந்தை அளித்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் லைபீரியாவைச் சேர்ந்த எபோலா வைரஸ் தாக்கிய 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக லைபீரிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்ட டாக்டர்களில் ஒருவரான ஆபிரகாம் போர்பர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். மேலும் லைபீரியாவில் சேவை செய்த ஸ்பெயினைச் சேர்ந்த பாதிரியாரை எபோலா வைரஸ் தாக்கியது. அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
லைபீரியாவில் வேலை செய்த இரண்டு அமெரிக்க டாக்டர்களை எபோலா வைரஸ் தாக்கியது. இதையடுத்து அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கும் இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.