குவைத்தில் நடந்த காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா
குவைத்: குவைத்தில் காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் கடந்த 8ம் தேதி சிறப்பாக நடந்தது. குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவி எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ தலைமை தாங்கினார்.
காயிதே மில்லத் பற்றிய ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார். ஆவணப்பட விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பேசிய ஷா நவாஸ் இந்த ஆவணப்படத்தை வெளியிட தான் பட்ட பாட்டை தெரிவித்தார். அண்ணா, பெரியார், காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்படங்கள் இருக்கையில் காயிதே மில்லத் பற்றி மட்டும் ஒன்றும் இல்லாததால் தான் அவர் பற்றி ஆவணப்படம் எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.