டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்கு அருகே துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ப் மைதானத்தில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகாமையிலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்ப் பத்திரமாக உள்ளதாக அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டொனால்டு டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் முடிந்த நிலையில், தொடர்ந்து இரு தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்கு மிக அருகில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள மேற்கு பால்ம் கடற்கரையில் உள்ள தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் இருந்ததாகவும் அப்போது, அவர் இருந்த வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருப்பதாகவும் டிரம்பின் பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது. டிரம்ப் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறபட்டுள்ளது. இது தொடர்பாக வேறு விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது என்ற விவரம் தெரியவில்லை. டிரம்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியிருந்தார். பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது டிரம்பை குறிவைத்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் டிரம்பின் காதை கிழித்தபடி துப்பாக்கி குண்டு சென்றது. இந்த தாக்குதல் முயற்சியில் இருந்து டிரம்ப் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் டிரம்ப், தங்கியிருந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications