மோடி பேசும் ஆங்கில உச்சரிப்பை மிமிக்ரி செய்து கிண்டலடித்த ட்ரம்ப்! வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended Video
வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை மிமிக்ரி மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்து பேசியதாாக அந்த நாட்டின் முன்னணி நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதித்தார்.
ஆப்கன் குறித்து மோடி கருத்து
மோடி கூறுகையில், சிறு லாபத்திற்காக இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வேறு நாட்டை பார்க்க முடியாது என கூறினார். அமெரிக்காவை புகழ்ந்தே மோடி அவ்வாறு கூறியிருந்தார். ஆனால், உலக நாடுகள் அமெரிக்காவை, ஆதாயம் தேடும் ஒரு நாடு என்பதை போல பார்ப்பதாக அந்த கருத்து அமைந்தது என ட்ரம்ப் கருதுகிறார்.
மிமிக்ரி செய்த ட்ரம்ப்
பின்னர் நடைபெற்ற அதிகாரிகளுடனான பல ஆலோசனை கூட்டங்களில், நரேந்திர மோடி கூறிய அந்த வார்த்தைகளை, இந்தியாவில் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையிலேயே ட்ரம்ப் பேசியுள்ளார். தொடர்ந்து இதுபோல அவர், இந்திய ஆங்கில உச்சரிப்பை கேலி செய்யும் வழக்கம் உடையவர்தான் என்றாலும், அவர் இந்திய பிரதமரின் பேச்சை இவ்வாறு மிமிக்ரி செய்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
உண்மையான நண்பர்
பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றபோது, அவரை உண்மையான நண்பர் என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப். இந்த நிலையில், இப்படி ஒரு சர்ச்சை இப்போது வெடித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகையிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க பத்திரிகையாளர்கள் முயன்று வருகிறார்கள். வெள்ளை மாளிகையில் இருந்து இதுகுறித்து பதில் தெரிவிக்கப்படவில்லை.
ட்ரம்ப்புக்கு இதே வேலை
இனவெறி கொண்டவர் என ட்ரம்ப் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் நடுவே பிளவை ஏற்படுத்த அவர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், இந்திய ஆங்கில உச்சரிப்பை ட்ரம்ப் கேலி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.