துபாய் ஹோட்டலில் தகராறு… தமிழர் மரணம்: கொலையில் முடிந்த செல்ஃபி
ஷார்ஜா: துபாயில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் செல்ஃபி எடுத்த போது ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரபு நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் பெயர் மகேந்திரன் யாதவ் என்பதாகும். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் துபாயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று இவர் தனது நண்பர்களுடன் துபாய் நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து அரபு நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மகேந்திரன் அவரது நண்பர்களுடன் செல்போனில் போட்டோ செல்ஃபி எடுத்தார். இதை பார்த்த அரபு நாட்டு வாலிபர், தன்னுடைய காதலியை படம் பிடிப்பதாக எண்ணி தகராறு செய்தார். இந்த தகராறு அடிதடியாக மாறியது.
அப்போது அந்த அரபு நாட்டு வாலிபர் மகேந்திரனின் தலையின் பின்புறம் வேகமாக அடித்தார். இதில் மகேந்திரன் மயங்கி விழுந்தார். அதை பார்த்த நண்பர்களும் ஹோட்டல் ஊழியர்களும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி கிடந்த மகேந்திரனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் திங்கட்கிழமையன்று நள்ளிரவில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அரபு நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் மரணமடைந்த மகேந்திரன் உடல் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். செல்ஃபி மோகத்தினால் பல சோகமாக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. துபாயில் செல்ஃபி எடுத்த போது கொலையில் முடிந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications