சாலமன் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்
பெர்த்: பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகள் அருகில் இருக்கும் மகீரா தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே உள்ளது சாலமன் தீவுகள். அந்த தீவுகள் அருகே உள்ள மகீரா தீவில் கிரா கிரா என்ற பகுதியின் தென்கிழக்கில் 100 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 29 கிமீ ஆழத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி இருந்தது.
இதையடுத்து சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் நியூ காலிடோனியா ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு பேரலைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.