இந்தோனேசியாவில் 7.9 ரிக்டரில் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்:இந்தியாவுக்கும் நிம்மதி
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சுமத்ராவுக்கு தென்மேற்கே இன்று மாலை 6.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமத்ரா பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவை இந்த சுனாமி அலைகள் தற்போதைய நிலையில் உடனே தாக்க வாய்ப்பில்லை என்று ஹைதராபாத் சுனாமி முன்னெச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தோனேசியாவின் படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுக்கோலில் 7.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுமத்ராவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications